பொறியியல் படிப்புகளில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.60 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 முதல்செப்.3-ம் தேதி வரை இணையவழியில் நடந்தது. இதன் முடிவில் 90,201 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 70,579 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்கள் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை தெரிவித்தது. அதன்படி, துணை கலந்தாய்வுக்கு 17,710 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போதுவெளியாகியுள்ளது. அதில் பொதுப் பிரிவில் 200-க்கு 199.5கட்ஆஃப் மதிப்பெண் பெற்று மாணவி வேதலட்சுமி முதல் இடம்பெற்றுள்ளார். 199 மதிப்பெண்ணுடன் ராம் பிரசாத், 198.5 மதிப்பெண்ணுடன் துருவன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி பிரியதர்ஷினி 188.5 கட்ஆஃப் மதிப்பெண்ணுடன் தரவரிசையில் முதல் இடம் பெற்றார்.

இவர்களுக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 17,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிமுறைகளின்படி, மாணவர்கள் பிடித்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் செப். 9-ம் தேதி நிறைவு பெறும். பிறகு, எஸ்சிஏ காலி இடங்களுக்கான கலந்தாய்வு செப்.10, 11-ம் தேதிகளில் நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE