முன்னாள் மாணவர்களுக்கு பாடமெடுத்த முன்னாள் ஆசிரியர்கள் - கிருஷ்ணகிரியில் கவனம் ஈர்த்த ஆசிரியர் தினம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தினத்தையொட்டி, புத்தகப் பையுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களுக்கு, முன்னாள் ஆசிரியர்கள் பாடம் நடத்தி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணகிரி சப் - ஜெயில் சாலையில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1995ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு 1995ம் ஆண்டு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் அங்கன்வாடி பணியாளரும், தற்போதைய கவுன்சிலருமான புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் யாரப் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் தமிழரசி பங்கேற்றார். இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் ரகுமான் ஷெரிப் சிறப்புரையாற்றினார்.

அப்போது, முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்த முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, தாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்கள் கண்டிப்புடன், நல்லொழுக்கங்கள் கற்றுக் கொடுத்தால்தான் நாங்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம். சிலர் நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்து மக்கள் பணிகள் சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக் கால நினைவுகூரும் வகையில், வகுப்பறைக்கு மதிய உணவு மற்றும் புத்தகப் பைகள் சுமந்தும் சென்றனர். அவர்களுக்கு முன்னாள் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். பின்னர், பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் ஆசிரியர்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்களும், நகராட்சி கவுன்சிலர்களுமான வேலுமணி, ஹேமாவதி பரந்தாமன், பிரதோஷ்கான், ஜெயக்குமார், சந்தோஷ், மதன்ராஜ், பாலாஜி, சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் கராமத் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE