தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் நூலக புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நூலக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மழைநீர் புகுந்ததால் சுமார் 1,000 புத்தகங்கள் நனைந்து சேதமாகின.

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டுக்காக நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. படிப்பு மற்றும் பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான தேடல்களுக்காக மாணவியரும், ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல, முறையான பதிவேடு நடைமுறைகளை பின்பற்றி வாசிப்புத் தேவைக்காக நூலக புத்தகங்களை மாணவியர் வீட்டுக்கு எடுத்துச் சென்றும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக புத்தகங்களில் ஒருபகுதியை தற்காலிகமாக பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வக அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின்போது அந்த அறைக்குள் மழைநீர் நுழைந்ததில் சுமார் 1,000 புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமாகின.நனைந்த புத்தகங்களை உலரச் செய்வதற்காக நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள நடைபாதை தளத்தில் அவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக தருமபுரி நகரில் கனமழை பெய்து வருகிறது. அப்போது, பள்ளி சுற்றுச் சுவரையொட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் தேங்கிய மழைநீர் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஆய்வக அறைக்குள்ளும் புகுந்தது.

அப்போது, குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் மட்டும் நீரில் நனைந்து விட்டன. அவற்றையும் வெயிலில் உலரவைத்து பயன்படுத்தும் வகையில் தயார் செய்துவிட்டோம். இதற்கு முன்பு எப்போதும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பள்ளிக்குள் மழைநீர் நுழைந்ததில்லை. கனமழையின் போது எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் சிறிதளவு புத்தகங்கள் நனைந்து விட்டன.

இனி இதுபோல் நடக்காத வகையில் உயர் அதிகாரிகள் அனுமதியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE