கோவை: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நீலகிரி மலை ரயிலில் இலவசமாக கல்லாறு வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில், ஓடந்துறை காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் 26 பேர் பயணம் செய்தனர். தலைமையாசிரியர் புனித செல்வியும் உடன் பயணித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “எங்கள் பள்ளி அருகிலேயே நீலகிரி மலை ரயில் பாதை உள்ளது. அந்த வழியாக ரயில் செல்லும்போது மாணவர்கள் ஒவ்வொரு முறையும் ஏக்கத்தோடு பார்த்து கையசைத்து மட்டுமே உள்ளனர். இதுவரை அவர்கள் யாரும் அதில் பயணித்தது இல்லை. அதில், பயணம் செய்யும் அனுபவம் இப்போதுதான் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பயணம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது”என்றார்.