சென்னை: இந்திய தேசிய பொறியியல் அகாடமியில், பொறியியல் கல்லூரிகள் நிறுவன உறுப்பினராக சேர அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அனைத்து தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர்களுக்கு ஏஐசிடிஇ ஆலோசகர் மம்தா ஆர்.அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
இந்திய தேசிய பொறியியல் அகாடமி (ஐஎன்ஏஇ), இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில், கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், முழு அளவிலான பொறியியல் துறைகளை உள்ளடக்கியது.
இதன்மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான திட்டமிடலுக்கு முக்கிய உள்ளீடுகளை வழங்கி வருவதுடன், தொழில்நுட்பம் தொடர்புடைய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
» கோவை மேயரின் குடும்பத்தின் மீதான புகாரை ஆராய்ந்து விசாரணை நடத்த வேண்டும்: வானதி சீனிவாசன்
» மதுரை மேயரிடம் தவழ்ந்து வந்த மனு கொடுத்த மாற்றுத்திறனாளி: சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்படுமா?
ஐஎன்ஏஇயின் பெரும்பாலான உறுப்பினர்கள், நாட்டின் உயர்நிலைப் பொறியியல் நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி, மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முதன்மையான சுயநிதி பொறியியல் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு உடையவர்கள்.
இந்நிலையில், ஏஐசிடிஇ மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், ஐஎன்ஏஇ-ன் நிறுவன உறுப்பினராக சேருவதற்கான ஒப்புதலை ஏஐசிடிஇ தற்போது வழங்கியுள்ளது. இதன்மூலம், பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில், ஐஎன்ஏஇ-ன் புகழ்பெற்ற நிபுணர் குழுவுடன் இருந்து பயன்பெற முடியும். கூடுதல் விவரத்துக்கு inaehq@inae.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.