“கிராமப்புற மாணவர்களின் திறனை வளர்த்ததில் மனநிறைவு” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் காட்வின் மகிழ்ச்சி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அலங்காநல்லூர் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதுமிருந்து 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.மாலதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப். 5-ல் புதுடெல்லியில் வழங்குகிறார். இவர்களுக்கு பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஆசிரியர் டி.காட்வின் வேத நாயகம் ராஜ்குமார், அப்பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவல ராகவும் பணிபுரிகிறார்.

கிராமப்புற மாணவர்களை என்சிசியில் சேர ஊக்குவித்தல், விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறார். டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வாள் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்களின் திறன்களை வளர்க்க உதவியுள்ளார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றி வருகிறார். தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை, மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

இது குறித்து ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ் குமார் கூறியதாவது: அரசுப் பள்ளியில் 25 ஆண்டுகள் உடற்கல்வி ஆசிரியராக உழைத்ததற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, அவர்களின் திறனை வளர்த்துச் சாதிக்கவும் வைத்துள்ளது மனநிறைவைத் தருகிறது.

என்னிடம், என்சிசி பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் தற்போது காவல் துறை, ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE