சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே மல்லலில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இதில் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 74 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதி பல ஆண்டுகள் பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் மாணவர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். விடுதியில் தங்கிய மாணவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து விடுதி நிர்வாகத்திடம் கேட்டபோது ‘மாணவர்களை அருகேயுள்ள வாடகைக் கட்டிடத்தில் மாற்ற உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது’ என்றனர்.