கோவை: நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தமிழக முதல்வருக்கு, அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களின் (கோச்சிங் சென்டர்கள்) கட்டணத்தையும், தரத்தையும் முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட், ஜேஇஇ மற்றும் பல நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இப்பயிற்சி மையங்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தரத்தை நிர்ணயம் செய்து அதனை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவற்றுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே கல்விக் கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும். தனியார் பயிற்சி மையங்களில் ஒரு வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இங்கு 9-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாணவன் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியது உள்ளது.
» புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
» பி.ஆர்க். படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - இணையவழியில் நாளை தொடங்குகிறது
மருத்துவம் மற்றும் மத்திய அரசின் பொறியியல் படிப்புக்கு செல்லும் மாணவர்களை விட 10 மடங்கு மாணவர்கள் பயிற்சி மையங்களில் படிக்கிறார்கள். அதனால் உயர் கல்வியை விட அதிக அளவு பணம் கொட்டும் தொழிலாக இந்த பயிற்சி மையங்கள் தொழில் உருவாகியுள்ளது. பல பயிற்சி மையங்களில் பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களையும் நியமிப்பதில்லை.
பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர் தகுதி, கட்டிட விதிமுறைகள், இயங்கு விதிமுறைகள் ஆகியவை எதுவும் நிர்ணயிக்கப்படாததால் பணத்தை கட்டிய பிறகும் பல பயிற்சி மையங்களில் தரமான கல்விகிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான கட்டிடத்தில் மிக அதிகமான மாணவர்களை அடைத்து வைத்து பயிற்சி அளிக்கப்படுவதால் மாணவர்களுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
பள்ளிகளின் கட்டிடத்துக்கு விதிமுறைகள் நிர்ணயிக்கப்படுவது போல, பயிற்சி மையங்களின் கட்டிடத்துக்கும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தையும், அதற்கான தரத்தையும், மாணவர்களின் உளவியல் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.