பி.ஆர்க். படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - இணையவழியில் நாளை தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பி.ஆர்க். படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையவழியில் நாளை (ஆக.21) முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,467 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக மொத்தம் 2,485 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அதில் 1,400 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு, விளையாட்டு வீரர் என சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 32 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் 8 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நாளை (ஆக.21) தொடங்குகிறது. இதில் விருப்பமான இடங்களைத் தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்பு இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிமுறைகளின்படி மாணவர்கள் பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை /barch.tneaonline.org/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE