சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை கட்டணம் உயர்வு: மாணவர்கள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலை.யில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை பல்கலைக்கழகத் தில் பிஎச்.டி போன்ற ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,600 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில்படிப்பை தொடர்வதற்கு கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

ஆராய்ச்சி படிப்புகளை முடித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை பல்கலை. ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கூறும்போது, ‘‘ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கட்டணத்தை ரூ.25 ஆயிரமாக (250 மடங்கு) உயர்த்தியுள்ளனர். பகுதிநேர ஆராய்ச்சி மாணவர்களிடம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பல்கலை. துணைவேந்தர் கவுரியிடம் கோரிக்கை மனு அளித்தோம். துணைவேந்தர், ஆய்வறிக்கை கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், சில மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை நிலவி வருவதால், மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE