அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது.

பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE