சென்னை: இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை 6 ஆண்டுகள் தாமதமாக மறு ஆய்வு செய்யக்கோரிய பள்ளிக் கல்விச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், வெண்ணிலா என்பவர் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று 2016-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பிறகும் அவர் ஒப்புதல் அளிக்காததால், மாவட்டக் கல்வி அலுவலருக்கு எதிராக 3 முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், 2016-ம்
ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கல்வித்துறைச் செயலர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2,148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும், கல்வித்துறைச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த தொகையை ஒரு வாரத்தில் சட்ட ்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.