சென்னை: அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணித்திறன் பயிற்சி, மாநில அளவில் ஜூலை 3, 4-ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து, வரும் கல்வியாண்டில் (2023-24) அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு தொடர் பணித்திறன் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான மாநில முதன்மைக் கருத்தாளர்கள் பயிற்சிக் கூட்டம், ஜூலை 3, 4-ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டம், ஜூலை 6, 7-ம் தேதிகளில் நடத்தப்படவிருக்கிறது.
பயிற்சியில் பங்கேற்க தகுதியான ஆசிரியர்களின் விவரப் பட்டியலை தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில்இடம்பெற்ற விரிவுரையாளர் களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் பயிற்சிக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தேவையான இடவசதி, கணினி தளவாடங்கள் உட்பட முன்னேற்பாடுகளை துரிதமாக முடிக்க வேண்டும். இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றிசெயல்பட அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.