சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) 660 இடங்கள் இருக்கின்றன.
இதை தவிர, திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 20 இடங்களும் உள்ளன.
இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில் நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், விண்ணப்ப அவகாசம் வெள்ளிக் கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடைவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.