நீலகிரி பழங்குடியின குழந்தைகளின் கல்வியில் ஒளிவிளக்கேற்றிய வனத்துறை!

By ஆர்.டி.சிவசங்கர்


கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

இதில், பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சியில் 394 பேர், குன்னூர் நகராட்சியில் 122 பேர், உதகை வட்டத்தில் 4 ஆயிரத்து 329 பேர், குன்னூர் வட்டத்தில் 2 ஆயிரத்து 397 பேர், கோத்தகிரி வட்டத்தில் 6 ஆயிரத்து 197 பேர், கூடலூர் வட்டத்தில் 15 ஆயிரத்து 450 பேர் என மொத்தம் 28 ஆயிரத்து 889 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

தோடர் - 29.52 சதவீதம், கோத்தர் - 32.71 சதவீதம், குரும்பர் -18.13 சதவீதம், முள்ளுக்குரும்பர் - 38.15 சதவீதம், இருளர் - 21.78 சதவீதம், பனியர் - 11.27சதவீத, காட்டுநாயக்கர் - 9.03 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். இவர்களில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலைவாய்ப்புகள் உள்ளதால் முன்னேற்றமடைந்துள்ளனர்.

ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பிற பழங்குடியின மக்கள், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் போதிய முன்னேற்றம் அடையவில்லை. கூடலூர், குன்னூர் தாலுகாக்களில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கிடையே கல்வி பெறுகின்றனர். வனப்பகுதியை ஒட்டி வாழ்விடங்கள் அமைந்துள்ளதால், வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது.

மேலும், போதுமான வாகன வசதி இல்லாததால், பெரும்பாலானோர் நடந்தே பள்ளிக்கு சென்றுவரும் நிலை உள்ளது. இந்நிலையில், பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு வனத்துறை உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதன்படி, மாணவர்களை வீடுகளில் இருந்து பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்ப அழைத்துவர வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கூடலூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட தேவர்சோலை அருகில் அமைந்துள்ளது செம்பக்கொல்லி பழங்குடியின கிராமம். வனத்தை ஒட்டிய பகுதி என்பதால், இந்த கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மாலை வேளைகளில் கூட மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில், குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்தில் இருந்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். யானைகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல் கட்டமாக குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர, வனத்துறை மூலமாக நாள்தோறும் இலவசமாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன்படி, கோடை விடுமுறை நிறைவடைந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், செம்பக்கொல்லி கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகளை வனத்துறை வாகனங்களில் அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் கிராமத்தில் விட்டு வருகின்றனர். பள்ளி நாட்களில் இவர்களுக்கான இலவச வாகன சேவை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடன் காத்திருப்போம். பல நேரங்களில் தேர்வெழுதக் கூட போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் நிறைந்த போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும், இது போன்று வசதி செய்து கொடுத்தால் நல்லது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE