2 மாத மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: உற்சாகத்துடன் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு உற்சாகமாக கிளம்பிச் சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 15-ல் துவங்கி ஜூன் 14 வரையிலும் 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டது. தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொழில் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.

மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவடையும் நிலையில், மாலையிலிருந்தே தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக வருமானமிற்றி தவித்து வந்த மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் அதிக மீன்கள் உற்பத்தியாகி இருக்கும் என்பதால் அதிகளவில் மீன்பாடும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் செல்கிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கரை திரும்புவார்கள். இதன் காரணமாக மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வயது கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். வெளிமாநிலத்தைச் சேந்தவர்களை மீன்பிடிக்க அழைத்துச் செல்லக்கூடாது. மேலும், விசைப்படகுகள் இந்திய கடல் எல்லையை தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது. மீனவர்கள், மீனவர் அடையாள அட்டை, படகு பதிவு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக உயிர் காப்பு உபகரணங்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை கடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது.

மீறி இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் விசைப்படகு மற்றும் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மீனவர்கள் பொதுநலத்திட்ட பயன்களில் இருந்து நீக்கம் செய்திட பரிந்துரைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அதேசமயம், தடைக்காலத்துக்குப் பிறகு கடலுக்குச் சென்று விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலையை கொள்முதல் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்க அரசு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE