விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் த.வெ.க. போட்டியில்லை: புஸ்ஸி ஆனந்த் தகவல்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை புஸ்ஸி ஆனந்த் சந்தித்தார். அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என கேட்டபோது, “கட்சியின் தலைவர் அறிக்கை மூலம் 2026 -ம் ஆண்டு தான் எங்கள் இலக்கு என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வாய்ப்பில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், கூட்டணி குறித்து விஜய் தான் அறிவிப்பார். விஜய் - மக்கள் சந்திப்பு குறித்து, முறையாக அறிவிப்பு வரும். கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் மாநாடு எங்கு நடைபெறும் என முறையான அறிவிப்பு வரும். கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் ரசிகர்கள் மக்கள் சேவை செய்து வருவதால், அதற்கான பலன் 2026-ம் ஆண்டு தேர்தலில் எங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE