சின்னாளப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைத்தறி பூங்கா திறப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: சின்னாளப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, நெசவாளர்களுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ஆர்.காந்தி ஆகியோர் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது. கைத்தறி பூங்காவை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திஆகியோர் திறந்துவைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான இந்த கைத்தறி பூங்காவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 70 கைத்தறிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் 90 நெசவாளர்கள் நேரடியாகவும், 160 நெசவாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

இங்கு மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், டை மற்றும் டை சேலைகள், சுடிதார் ரகங்கள் போன்ற ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதன்மூலம் நெசவாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.550 முதல் 650 வரை ஊதியம் பெறும் வகையில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், “தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார். அதன்படி, சின்னாளப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான இந்த கைத்தறி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இது மூன்றாவது பூங்கா ஆகும்.

நெசவாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1000 வருமானம் கிடைக்க வேண்டும் என்பற்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பூங்கா நெசவாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதை நல்ல முறையில் நெசவாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். விழாவை முன்னிட்டு சின்னாளப்பட்டி பகுதியில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சியும் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE