குன்னூர்: குன்னூர் பகுதியில் அதிகமான இடங்களில் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதனை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய அரிய வகை பழங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதில், குழந்தை பாக்கியத்தை தருவதாகச் சொல்லப்படும் துரியன் பழம், பேரி, பிளம்ஸ், பீச், கமலா ஆரஞ்ச், ரம்புட்டான், பப்பினோ உள்ளிட்ட பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவற்றில் தற்போது குன்னூர் பகுதியில் அதிகமான இடங்களில் ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது. இதன் மரங்களில் கொத்து கொத்தாக பச்சை நிறங்களில் ஊட்டி ஆப்பிள் காய்த்துக் குலுங்குகிறது. சிம்லா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் விளையும் வழக்கமான ஆப்பிள்களைப் போல் அல்லாமல் இவ்வகை ஆப்பிள் பச்சை நிறத்திலேயே காணப்படுவது தனிச் சிறப்பு. இந்த வகை ஆப்பிள் இனிப்பு இல்லாமல் புளிப்பு அதிகமாக இருக்கும். கர்ப்பிணிகளின் விருப்பத்துக்கு உகந்த கனி இது.
தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் உள்ள மரங்களில் ஊட்டி ஆப்பிள் விளைந்துள்ளது. ஊட்டியில் உள்ள இத்தனை அபூர்வமான இந்த பச்சை ஆப்பிள் மரங்கள் அழிவை நோக்கிச் செல்வதால், இதனை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.