சிறுமுகை வனச்சரகத்தில் நடவு செய்ய வனத்துறை சார்பில் 10,000 மரக்கன்றுகள் உற்பத்தி

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டினுள் நடவு செய்ய சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை காடுகளை கொண்டதாகும். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள இவ்வனப்பகுதியில் யானை, மான், காட்டெருது உள்ளிட்ட விலங்கினங்களுக்கு தேவையான மர மற்றும் செடி, கொடிகள் என தாவர வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

இதனால் அவை உணவு தேடி காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தேடி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 11,684 ஹெக்டேர் நில பரப்பளவு கொண்ட சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டினுள் நடவு செய்ய சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

வன வளர்ச்சி திட்டத்தின் கீழ் யானை உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு பிடித்தமான உசில், மூங்கில், இலந்தை, கொடுக்காய்புளி, மகாகனி உள்ளிட்ட பல்வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நாற்றுகளுக்கென வனப்பகுதிக்குள் இருந்தே தரமான மண் எடுத்து வந்து தரமான விதைகள் மூலம் இந்த மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இவை ஓரளவு வளர்ந்தவுடன் மர அடர்த்தி குறைந்த காட்டு பகுதியில் நடவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் வனவளர்ச்சி மற்றும் காட்டுயிர்களுக்கு தேவையான தீவனங்கள் வனத்தினுள்ளேயே கிடைப்பது உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE