ஆந்திராவில் மருத்துவமனை கட்ட டாக்டர் மருமகளிடம் ரூ.5 கோடி கேட்ட மாமனார் மாமியார் மீது வழக்கு @ மதுரை

By என்.சன்னாசி


மதுரை: மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் ஆந்திராவில் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.5 கோடி கேட்ட மாமனார் மாமியார் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுரை காந்தி நகரைச் சேர்ந்தவர் மேக்னா பிராந்தி (28). மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்த இவர் ஆந்திராவிலுள்ள கல்லூரி ஒன்றில் மேல் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கண் மருத்துவர் கார்லபட்டீ ஆதித்யா கணேஷ் (29) என்பவர் மேக்னாவை திருமணம் செய்ய முடிவெடுத்து பெற்றோருடன் வந்து பெண் கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கு மேக்னா பிராந்தியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இருந்தபோதும் ஆதித்யா கணேஷின் பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி மேக்னா பிராந்தியின் பெற்றோரை சம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து, 2021 டிசம்பரில் 1-ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 2022 பிப்ரவரி 16-ல் திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது, மேக்னாவுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்களை அவரது பெற்றோர் அவருக்கு வரதட்சணையாக தந்திருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மதுரை மருத்துவமனை ஒன்றில் ஆதித்யா கணேஷுக்கு வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரை காந்தி நகரில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஆந்திர மாநிலம் குண்டூருக்கு சென்ற கணவரை பார்க்க, மேக்னா பிராந்தி அங்கு சென்றுள்ளார். ஆனால், கணவர் வீட்டார் அவரை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளனர். மேலும், ஆந்திராவில் புதிதாக மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.5 கோடி பணம் வேண்டும் எனக்கேட்டு மேக்னாவிடம் அவர்கள் பிரச்சினை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தனக்குச் சொந்தமான நகைகள் மற்றும் பொருட்களை அபகரித்துக் கொண்டு தன்னுடன் வாழ மறுப்பதாக கணவர் ஆதித்யா கணேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது மதுரை மாநகர துணை ஆணையரிடம் (வடக்கு) மேக்னா பிராந்தி புகார் அளித்தார். அதன் பேரில், அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, ஆதித்யா கணேஷ், அவரது தந்தை மருத் துவர் சதீஸ்குமார், தாயார் ஜனவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE