சிவகங்கையில் உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை கத்தியை காட்டி தாக்கிய கும்பல்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கையில் பார்சல் உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை கத்தியை காட்டி தாக்கியவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை தெப்பக்குளம் கரையில் உணவகம் நடத்தி வருபவர் விவேகானந்தன் (45). இவரது உணவகத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த 2 பேர் ரூ.400-க்கு அசைவ உணவுகளை பார்சல் வாங்கியுள்ளனர். அவர்களிடம் விவேகானந்தன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இருவரும் பணம் தர மறுத்ததோடு, விவேகானந்தனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் அவரை கடுமையாக தாக்கிவிட்டு, உணவு பொருட்களையும் சிதறவிட்டு தப்பிச் சென்றனர். உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவேகானந்தன் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீஸார், உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்கியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே உணவக உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூகஊடகங்களில் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE