திண்டுக்கல் | கொலை வழக்கில் சிக்கி யாசகர் வேடத்தில் சுற்றிய நபர் 22 ஆண்டுகளுக்கு பின் கைது

By என். சன்னாசி

திண்டுக்கல்: கொலை வழக்கில் சிக்கி, திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்கார வேடத்தில் சுற்றிய நபர் 22 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். செக்கானூரணி பகுதியைச் சேர்ந்தவர் தார்பாய் முருகன். இவர்கள் கோஷ்டியாக செயல்பட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 1998-ல் திருமங்கலம் அருகில் வைத்து ரமேஷ் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில் திண்டுக்கல் ஆர்வி நகரைச் சேர்ந்த பாலன் மகன் ரமேஷ்குமார் (47)என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து, அவர் மீது செக்கானூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை போலீஸார் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அவர் திண்டுக்கல் பகுதியில் மாறு வேடத்தில் சுற்றுவது சொக்கானூரணி போலீசாருக்கு சமீபத்தில் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் திண்டுக்கல் பகுதியில் அவரை கண்காணித்தபோது, மலைக்கோட்டை அருகே அவர் பிச்சைக்கார வேடத்தில் சுற்றுவது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து சொக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், அவர் போலீ ஸாரின் பிடியில் சிக்காமல் இருக்க, பிச்சைக்கார வேடத்தில் சுற்றியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் 22 ஆண்டுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE