தஞ்சை அருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சை: திருவிடை மருதூர் வட்டம் அருகே வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் தமிழ்வளவன் (28). இவர் வில்லிய வரம்பல் மகா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவை காண அண்மையில் அந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அக்கோயிலில் அம்பாள் புறப்பாடுக்காக வான வேடிக்கை நடைபெற்றது.

அப்போது அந்த வான வேடிக்கையைப் பார்ப்பதற்காக கோயிலின் மேலே உள்ள கோபுரம் அருகில் செல்வதற்காக கோயில் சுற்றுச்சுவர் பகுதியில் இருந்த சிங்க சிற்பத்தின் மீது தமிழ்வளவன் ஏறியுள்ளார். அப்போது சிற்பம் உடைந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு தமிழ்வளவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த, நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் கே. ரேகா ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE