தஞ்சாவூர் | சண்டையில் மகனைக் காப்பாற்றச் சென்ற தாய் உயிரிழப்பு: தம்பதி கைது

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், மேலவிசலூரில் மகனைத் தாக்குவதை தடுக்கச் சென்ற தாய் கொலைச் செய்யப்பட்டார்.

மேலவிசலூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, இவரது மனைவி வாணி (45). இவர்களுக்கு திவாகர் என்ற மகன் உள்ளார். அண்ணாதுரையின் சகோதரரான, அதே பகுதியைச் சேர்ந்த அய்யர் (என்கிற) வெங்கடேசனுக்கு சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், வெங்கடேசனுக்கும், மேலவிசலூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(60) என்பவருக்கு பணம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், திவாகரின் தூண்டுதலின் பேரில் தான், கோவிந்தராஜ் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார் எனக் கருதி, வெங்கடேசன் நேற்று இரவு, அண்ணாதுரை வீட்டின் முன் தகாத வார்த்தைகள் பேசி இருக்கிறார்.

இது குறித்து திவாகர், கேட்டபோது, ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர், திவாகரை தாக்க முயன்றனர். இதனையறிந்த திவாகரின் தாய் வாணி, தடுக்க முயன்றிருக்கிறார், இந்தச் சண்டையில் வாணியை, இருவரும் சேர்ந்து கீழே தள்ளி விடுகிறார்கள். இதில் பலத்த காயமடைந்த வாணியை அருகிலுள்ளவர்கள், தூக்கிக் கொண்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நாச்சியார் கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து, கணவன்-மனைவியான வெங்கடேசன், லதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE