திரிபுரா | சிறுமியின் தலை ஒரு பையில்; மற்ற உடல் பாகங்கள் வேறொரு பையில் வைத்து மறைத்த கொலையாளி கைது

By செய்திப்பிரிவு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 15 வயது சிறுமியை கொலை செய்து, உடலை இரண்டு பாகங்களாக வெட்டி தலை ஒரு பையிலும், உடலின் மற்ற பாகங்கள் வேறொரு பையிலும் வைத்து மறைத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளானர். கைது செய்யப்பட்ட அந்த நபர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் கணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமியை, கொலையாளி திருமணம் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அவர் காணவில்லை என்ற தகவல் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சில மணி நேரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டதையும், அவரது உடலையும் கண்டெடுத்துள்ளனர்.

இந்த கொலையை செய்த கயெம் மியாவை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியின் வீட்டில் ரத்தக்கறை இருந்துள்ளது. அதை கண்ட அவரது தாயார் கலங்கி அழுதுள்ளார். தொடர்ந்து உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கயெம் மியா தான் கொலையாளி என உறுதி செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை வியாழன் அன்று கொலை செய்து, தலை ஒரு பையிலும், மற்ற பாகங்களை வேறொரு பையிலும் வைத்து காட்டுக்குள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE