தொழிலில் நஷ்டம்: திருபுவனம் திமுக கிளைச் செயலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

By சி.எஸ். ஆறுமுகம்

திருபுவனம்: தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் திமுக கிளைச் செயலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலா (என்கிற) பாலசுப்பிரமணியன் (44). திருவோணம் பேரூர் திமுக கிளை செயலாளர் உள்ள இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு கடந்த கரோனா தொற்று காலகட்டத்தில் தொழிலும், ஏலச் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனவேதனையில் இருந்தவர் நேற்று இரவு, திருநாகேஸ்வரம் ரயில்வே கேட் அருகில் வந்த அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் டி.சிவராமன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE