மும்பை: மும்பை பாந்த்ராவைச் சேர்ந்தவர் மோகன் வத்வா. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது.
இந்நிலையில், மோகன் வாங்கிய வாகனத்துக்கான மாதத் தவணையை செலுத்த கோரி அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. எதிர்த் தரப்பில் பேசிய பெண் அதற்கான லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை தனது வங்கி மேலாளருக்கு அனுப்பி தன்னுடைய மற்றொரு கணக்கில் இருந்து வாகனத்துக்கான மாதத் தவணை ரூ.47,002 செலுத்தி விடுமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த லிங்க் போலி என்று பின்னர் அறிந்து போலீஸில் மோகன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறு கையில், “மோகன் கடன் தவணை செலுத்த வேண்டியிருப்பதை நன்கு அறிந்த வங்கி ஊழியர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். மொபைலில் பேசிய அந்த பெண் மோகன் கணக்கு முடக்கப்பட்ட விவரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். மோகனின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பணத்தை வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளோம்’’ என்றார்.