மால்டா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது. மால்டா மாவட்ட உயர்நிலைப் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் 8-ம் வகுப்பு அறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியரிடம் துப்பாக்கியை காட்டி சுட்டுக் கொன்று விடுவதாக பயமுறுத்தியுள்ளார். இதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த நபரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து, கைத்துப்பாக்கி, இரண்டு பாட்டில்களில் ஒருவித திரவம், கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு வருடத்துக்கு முன்பாக காணாமல் போன தனது மனைவியையும், மகனையும் கண்டுபிடித்து தர அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக கூறினார். இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.