சேலத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: தலைவாசல் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஆசிரியை படுகாயமடைந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணன். இவரது மகள் சத்திய பிரியா (29). சிறுபாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் செல்வமணி (34). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை சத்திய பிரியா அவரது உறவினர் வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் எஸ்.புதூருக்கு சென்றார். புளியங்குறிச்சி - வீரகனூர் சாலையில் சென்றபோது, தனியார் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த சத்யாபிரியாவின் மீது பேருந்து ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர், உடலை மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக் குள்ளானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE