அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை வழக்கு: கைதான 5 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி நகைக் கொள்ளை வழக்கில் கைதான 5 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவன கிளையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் ரூ.11 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.

வங்கி மண்டல மேலாளர்: வங்கி சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இதே வங்கியின் மற்றொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

நகைப்பட்டறை உரிமையாளர்: அதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ்குமார், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், பாலாஜி, சக்திவேல், சூர்யா, செந்தில்குமார் மற்றும் கோவையைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் முருகன், பாலாஜி, சந்தோஷ்குமார், சூர்யா, செந்தில்குமார், ஸ்ரீவத்சன் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே பாலாஜி மீது குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் எஞ்சிய முருகன், சந்தோஷ்குமார் உட்பட 5 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விதிமுறைகளை பின்பற்றவில்லை: இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கும் முன்பாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை போலீஸார் முறையாக கடைப்பிடிக்கவில்லை என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE