விருதுநகர்: திண்டுக்கல்லில் சின்னத்தம்பி என்பவர் கடந்த மாதம் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவராஜ்குமார் (29), விக்னேஷ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட போது இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சின்னத்தம்பி கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் கார்களில் வந்த கும்பல் ஏப்.18-ம் தேதி இரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, யுவராஜ்குமார், விக்னேஷ், ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இந்த சம்பவம் குறித்து 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சரவணன் (30), தங்கமடை (32) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விருதுநகர் நீதிமன்றத்தில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.