திருவாரூர்: நன்னிலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், வேலை காரணமாக உடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நன்னிலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த ஏப்.12-ம் தேதி பணிக்கு வந்த அவர், மதிய உணவு இடைவேளையின்போது தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு, நன்னிலத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த நன்னிலம் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
» இலங்கையை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
» முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம், மருத்துவப் படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
வேறொரு பெண்ணுடன் காதல்: இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும், நாகை மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ்(26) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர், சத்தியராஜூக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சத்தியராஜூக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 12-ம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சத்தியராஜூடன் அவர் செல்போனில் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். அதற்கு சத்தியராஜ் சரி என கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வதை சத்தியராஜ் வீடியோ காலில் பார்த்து ரசித்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சத்தியராஜை நேற்று கைது செய்தனர்.