கள்ளகுறிச்சியில் கொடூரமான முறையில் பெண், 2 குழந்தைகள் கொலை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, நரிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போலீ ஸார் நேற்று இரவு அந்தப் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது, பெண் ஒருவரும், இரு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ், டிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகளும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி வளர்மதி (30) மற்றும் அவரது குழந்தைகள் தமிழரசன் (10), கேசவன் (8 மாதம்) என்பது தெரியவந்தது. மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட நிலையில், இரு குழந்தைகளுடன் வளர்மதி தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

3 பேரின் உடல்களின் மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. உடல்களை கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்து 3 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கும் போலீஸார், இந்தக் கொலையை செய்தது யார்? எதற்காக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE