தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம் தனியாருக்கு விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அரசு நிலத்தின் ‘அ’ பதிவேட்டை கணினி மூலம் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவ்வழக்கில் 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் (39), ரமேஷ் (52), முத்து (58), பாலு (41), சுரேஷ் (40) ஆகிய 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
நேற்று இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.