திருப்பூர் மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர், மகளை அரிவாளால் வெட்டிய சம்பவம்: வழக்கறிஞருக்கு இரட்டை ஆயுள்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிய வழக்கறிஞருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (42). திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளார். இவருடைய மகள் நிஷா (21). சேலம் அரசு சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்.17-ம் தேதி ஜமீலா பானு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தன்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்தார். மகள் நிஷாவும் உடனிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர், அலுவலகத்துக்குள் புகுந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜமீலா பானு, நிஷா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வடக்கு போலீஸார், இருவரையும் மீட்டனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில், ஏற்கெனவே படித்த திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த முகமது ரகுமான்கான் (25) என்பவர், நிஷாவுக்கு காதல் தொல்லை அளித்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சேலம் கொண்டாலம்பட்டி காவல் நிலையத்தில் முகமது ரகுமான்கான் மீது நிஷா புகார் அளித்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த, முகமது ரகுமான்கான் திருப்பூரில் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீலாபானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து கேரளாவில் பதுங்கி இருந்த வழக்கறிஞர் முகமது ரகுமான்கானை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு, திருப்பூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகள் ஆகிய இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததற்காக முகமது ரகுமான்கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம் வீதம், ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் எஸ். கனகசபாபதி ஆஜாரானார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கில் உதவி புரிய பெண் வழக்கறிஞர்கள் சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் பூங்கொடியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து முகமது ரகுமான்கானை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE