கரூர் அருகே நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

கரூர்: கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேரை வெங்கமேடு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கரூரை சேர்ந்த கவுதம் (28), ஆனந்த் (27) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இருவரையும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து தினேஷ்குமார் நிறுத்திவிட்டார். மேலும், கவுதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் தினேஷ் குமாருக்கு தர வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் தர வேண்டிய ரூ.3 லட்சத்தை தினேஷ் குமார் திருப்பி கேட்டுள்ள நிலையில், தினேஷ் குமார் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தப்போது முன்னாள் ஊழியர்களான கவுதம், ஆனந்த் மற்றும் கவுதமின் அண்ணன் மதன் (30) ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இது குறித்து வெங்கமேடு போலீஸில் தினேஷ் குமார் இன்று (ஏப்.7) அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கவுதம், மதன், ஆனந்த் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE