சென்னை | மதுகுடிக்க பணம் கொடுக்காததால் புது மாப்பிள்ளை நள்ளிரவில் கொலை: தப்பியோடிய 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மது குடிக்க பணம் கொடுக்காததால் புது மாப்பிள்ளை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள6 பேர் கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம், மூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இருக்கும் வீட்டில் வசதி குறைவாக இருந்ததால் வில்லிவாக்கம் திருமலை நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு மாறி செல்ல அவர் திட்டமிட்டார்.

இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலுள்ள பொருட்களை வாகனம் ஒன்றில் மணிகண்டன் ஏற்றினார். அவருக்கு உதவியாக, அவரது தம்பியும் உடனிருந்தார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் வழிமறித்தனர். அவர்கள் மதுகுடிக்க பணம் தர வேண்டும் என கேட்டனர். பணம் கொடுக்க மணிகண்டன் மறுத்தார்.

இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த6 பேரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். கல்லாலும் தலையில் பலமாக தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற அவரதுதம்பி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து தாக்குதல்நடத்திய 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியது. இதற்கிடையில், தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்து ஐ.சி.எப்.போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். மணிகண்டன் உடலை மீட்டுபிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு போராடிய மணிகண்டன் தம்பியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE