சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் திருடுபோன வழக்கில், இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகனும், பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் சென்னை அபிராமபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தங்களது வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷணா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தங்களது வீட்டில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை கடந்த மாதத்தில் இருந்து காணவில்லை என்றும், தங்களது வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தர்ஷணா கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், விஜய் யேசுதாஸின் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர், அவரது வீட்டில் பணிபுரிந்துவரும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஏற்கெனவே இந்த வீட்டில் பணியாற்றிவிட்டு, பணியில் இருந்து விலகியவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.