டெல்லியில் கொசுவர்த்தி புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: போலீஸ் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, டெல்லி வடக்கு மாவட்ட டிசிபி ஜாய் ட்ரிகி கூறும்போது, "வடக்கு டெல்லியில் இருக்கும், சாஸ்திரி பார்க் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலையில் ஓர் அழைப்பு வந்தது. அதில், மச்சி மார்கெட் அருகில் உள்ள மஸார் வாலா சாலையில் ஒரு வீட்டில் தீப்பிடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்தி வைத்திருந்த கொசுவர்த்திச் சுருள் மெத்தையில் விழுந்து தீ பிடித்துள்ளது. அதனால் உண்டான கார்பன் மோனாக்ஸைடு நச்சுப்புகையினை இரவு முழுவதும் சுவாசித்ததால் அதில் 6 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் வீட்டிற்கு அனுப்ப்பபட்டார். நான்கு ஆண்கள் ஒரு குழந்தை, ஒரு பெண் என ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE