சேலம்: 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர், காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் குழந்தைகளுடன் தங்கிருந்து கூலி வேலைக்கு சென்று வசித்து வந்தார். மேட்டூர், ஆஸ்பத்திரி காலணியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (28). லோகநாயகியுடன் அறிமுகமான நவீன்குமார் அவரது குடும்பத்தினருடன் பழகி வந்தார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி லோகநாயகியின் செல்போன் சார்ஜ் இல்லாததால், நவீன்குமாரிடம் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து, நவீன்குமார் லோகநாயகியின் செல்போனுக்கு சார்ஜ் போட்டு, அவரது மகள் 12 வயது சிறுமியிடம் போனை கொடுத்து அனுப்புவதாக அழைத்து சென்றார். மேட்டூர் நகராட்சி குட்பை கொட்டும் குடோனுக்கு நவீன்குமார் சிறுமியை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டடுள்ளார்.

இதுகுறித்து 12 வயது சிறுமி தனது தாய் லோகநாயகிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லோகநாயகி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை செய்து, நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நவீன்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE