சேலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள்

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் 26 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் அருகே ஓமலூர், வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது சகோதரியின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த இளைஞர் காதலித்து வந்தார். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி உதகை சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து முருகேசன் உள்ளிட்ட உறவினர்கள், இருவரையும் மீட்டு ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும், அந்த பெண்ணுக்கு வேறொரு திருமணத்தை நடத்தி வைத்தனர். அதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன், சசிகுமார் ஆகியோர் இளைஞரின் காதலுக்கு உதவி செய்து வந்துள்ளனர். கடந்த 1997-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி முருகேசன், அவரது நண்பர் கந்தசாமி, முருகன் ஆகியோர் இணைந்து பெரியண்ணன், சசிகுமாரை அவர்களது தோட்டத்திற்கு வரவழைத்து கொலை செய்தனர். பின்னர், இருவரின் உடலை டிராக்டரில் எடுத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே குப்பைத் தொட்டியில் வீசி சென்றனர்.

சித்தோடு போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன், கந்தசாமி, சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஓமலூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணையானது, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் சங்கர் என்பவர் இறந்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் துரைராஜ் ஆஜராகி வாதாடி வந்தார். வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரட்டை கொலையில் தொடர்புடைய கந்தசாமி, முருகேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.82 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் . மேலும் கொலையான பெரியண்ணனின் மனைவி வளர்மதிக்கு ரூ.41 ஆயிரம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE