ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட 100 சவரன் தங்க நகைகள், வைரம், வெள்ளிப் பொருட்கள் மீட்பு: இருவர் கைது 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்க நகைகளை திருடிய வழக்கில் வீட்டு பணிப்பெண் உட்பட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து
சுமார் 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, போயஸ் கார்டன், ராகவீர அவென்யூவில் வசித்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி-2023 மாதம் வீட்டிலுள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்தபோது, தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் (E-3) புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் மேற்படி வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவரை விசாரணை செய்து, அவரது வங்கி விவரங்கள் உள்ளிட்டவைகளை கண்காணித்ததில், ஈஸ்வரி மேற்படி புகார்தாரர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில், ஈஸ்வரியிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஈஸ்வரி, மேற்படி வீட்டில் சுமார் 18 ஆண்டுகளாக வேலை செய்து வருவதும், ஐஸ்வர்யா தங்க, வைர நகைகள் அடங்கிய லாக்கரின் சாவியை வைத்து செல்லும் இடம் தெரிந்து, புகார்தாரரின் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லாக்கரில் இருந்து சிறிது சிறிதாக தங்க, வைர நகைகளை திருடியதும், திருடிய நகைகளை விற்று சென்னையில் வீடு மற்றும் பொருட்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

மேற்படி வீட்டில் திருடிய மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி (46) மற்றும் திருவேற்காட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேசன் (44) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய சுமார் 100 சவரன் தங்க நகைகள், 30கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE