கும்பகோணம் அருகே கல்லூரி மாணவனை கடத்திய கும்பல் வழிப்பறி வழக்கில் சிக்கியது

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சாக்கோட்டையில் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்த கல்லூரி மாணவனை கடத்திய வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் பெரியண்ணா (19). கல்லூரி மாணவரான இவர், கடந்த 16 ஆம் தேதி சாக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது, இவரிடம் திருமண வீட்டார், மண்டபத்தின் வெளியில் காரில் காத்திருக்கும் வலங்கைமானைச் சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வரும்படி கூறியுள்ளனர்.

அதன் பேரில், பணத்தை கொடுக்கச் சென்ற கல்லூரி மாணவர் பெரியண்ணா, நீண்ட நேரமாகியும், திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரது தந்தை விஜயராகவனுக்கு தகவலளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு கல்லூரி மாணவன் பெரியண்ணாவின் செல்போனில் இருந்து அழைத்த நெடுமாறன் மாணவனை கடத்தியதாகவும், ரூ.10 லட்சம் கொட்டும் மிரட்டியுள்ளார்.

பணம் தர முடியாது என விஜயராகவன் கூறியதால், ஆத்திரமடைந்த நெடுமாறன், மாணவன் பெரியண்ணாவின் கை, கால்களை கட்டி, கும்பகோணத்தை அடுத்த நீரத்தநல்லூர் கருவேலமரக் காட்டில் தூக்கி வீசிச் சென்றனர். இதனிடையே, அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மாணவர் பெரியண்ணாவை மீட்டனர்.

இது குறித்து மாணவரின் தந்தை விஜயராகன் நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில், காவல் ஆய்வாளர் கே.ரேகா ராணி மற்றும் போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட நெடுமாறன் (33), சந்திர சேகரபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (19), வலங்கைமானைச் சேர்ந்த நிவாஸ் (21), விக்னேஸ்வரன் (23) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி வலங்கைமான பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற வழக்கில் 4 பேரும் வலங்கைமான் போலீஸார் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 4 பேர் மீது இரண்டு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE