சேலத்தில் வட மாநில இளைஞர் மர்ம மரணம்: காவல் துறை விசாரணை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் வட மாநில இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, லாரி மார்க்கெட் பின்புறம் ரயில் பாதை அருகே இளைஞரின் சடலம் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர், பிஹார் மாநிலம், பட்னா பகுதியைச் சேர்ந்த தோரிஜ் அன்சாரி (40) என்பது தெரியவந்தது. இவர் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பருப்பு ஆலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு மில்லில் இருந்து சென்றவர், இன்று காலை மார்க்கெட் ரயில்வே தண்டவாள பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இறந்து கிடந்த வட மாநிலத்தை சேர்ந்த தோரிஜ் அன்சாரியின் உடலுக்கு அருகே இருந்த மது பாட்டிலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர் அளவுக்கு அதிமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE