சென்னை | திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய நபர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் திருட சென்ற வீட்டில்குடி போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு கஸ்தூரி பாய் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் நரேன்(32). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் நரேனின் பெற்றோர், காசிக்கு புனித யாத்திரை சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை திரும்பியுள்ளனர்.

பெற்றோர் வருவதால் வீட்டின் கதவை முன்கூட்டியே கார்த்திக் நரேன் திறந்து வைத்துவிட்டு அவரது அறைக்கு தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் படுக்கை அறைக்கு சென்ற போது கட்டில் மெத்தையில் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் கார்த்திக் நரேனை அழைத்தனர். அப்போது மெத்தையில் படுத்திருந்த நபர் திடீரென்று எழுந்து மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். இது குறித்து கார்த்திக் நரேன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அடையாறு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அறையில் பதுங்கி இருந்த நபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஏழுமலை(27) என்பது தெரியவந்தது. அவரது பையை போலீஸார் சோதனை செய்தபோது, வீட்டில் இருந்து திருடிய ரூ.42 ஆயிரம் பணம் மற்றும் 20 யூரோ கரன்சி நோட்டுகள் அதில் இருந்தது. அதனை பறிமுதல் செய்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அடையாறில் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்த ஏழுமலை, பணி முடிந்து மது அருந்தியுள்ளார். மதுபோதையில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து, திறந்து கிடந்த கார்த்திக் நரேன் வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த பணத்தை திருடியுள்ளார். அப்போது, பசியில் இருந்த ஏழுமலை பிரிட்ஜில் இருந்த சாக்லெட்டுகளை சாப்பிட்டுள்ளார்.

அதை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏறி அந்த வீட்டிலேயே தூங்கிவிட்டார்’ என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணைக்கு பின்னர் ஏழுமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE