சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில், பெங்களூரு சிறையிலிருந்த இருவர் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ 20 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த இந்த கொள்ளை தொடர்பாக திரு.வி.க நகர் போலீ
ஸார் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தகங்காதரன், ஸ்டீபன் ஆகிய 2 பேரும் வேறு ஒரு வழக்கில் சிக்கி பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முன்னதாக அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்க நகைபறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில்கடந்த 4-ம் தேதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவாகர் (28), கஜேந்திரன் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு போலீஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை சென்னை போலீஸார் கைது செய்து அவர்களை நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
அவர்களை 5 நாள் காவலில் விசாரிக்க கோரி உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள அருண் மற்றும் கவுதம் ஆகிய மேலும் இருவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். நகைகளை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.