சிவகாசி: சிவகாசி அருகே ஆத்தூர் பகுதியில், தன்னை உருவக் கேலி செய்த உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்த முத்துராஜ் (38) இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே ஆத்துார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). கூலி வேலை செய்து வந்தார். மணிகண்டன் தனது உறவினரான முத்துராஜ் (38) என்பவருடன் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் முத்துராஜின் உடல் குறைபாடு குறித்து மணிகண்டன் கேலி செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்து வந்து மணி கண்டனை குத்தி கொலை செய்தார். தகவலறிந்து வந்த போலீஸார் மணிகண்டன் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.
விசாரணையில் உடல் குறைபாடு குறித்து கிண்டல் செய்ததால் மணிகண்டனை கத்தியால் குத்தியதாக முத்துராஜ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.