சேலம்: சேலம் அருகே ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாக ஆசை காட்டி ரூ.2 லட்சம் பறித்த இருவரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(63). இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டி, கடந்த ஜனவரி மாதம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய திருப்பூர் மாவட்டம், அவிநாசி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி( 51) மற்றும் கோவை சரவணம்பட்டி சக்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (52) இருவரும் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளனர்.
இருவரும் பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு நேரில் வந்து ரூ.2 கோடி கடன் தொகையை குறைந்த வட்டியில் வாங்கி தருவதற்காக முன்பணமாக ரூ.2 லட்சத்தை பெற்று சென்றனர். அதன் பிறகு இருவரும் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் பெற்று தருவதாக முன்பணமாக ரூ.2 லட்சத்தை கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி பெற்று சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸார் நேற்று முன்தினம் கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணியை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.