கரூர் | இரு சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே சகோதரிகளான இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டை அச்சமாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (43). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்.14-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான 6 மற்றும் 4 வயது சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (மார்ச் 4ம் தேதி) அளித்த தீர்ப்பில், வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் 2 சிறுமிகளுக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE